மதுரை, நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலி


மதுரை, நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலி
x
தினத்தந்தி 21 Oct 2018 9:30 PM GMT (Updated: 21 Oct 2018 10:37 PM GMT)

மதுரை, நாகர்கோவிலில் பன்றி காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலியாகி உள்ளனர்.

மதுரை, 

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மதுரை பைக்காரா பகுதியை சேர்ந்த காசிமாயன் மனைவி மீனாட்சி(வயது 47), அனுப்பானடியை சேர்ந்த சதாசிவம் மகன் அகிலன்(21) உள்பட 4 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மீனாட்சியின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு தனிப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக இறந்துபோனார். மீதமுள்ள 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள்(70). இவர் காய்ச்சலால் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது வேலம்மாளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்றிரவு வேலம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

நாகர்கோவில் சற்குணவீதி பகுதியை சேர்ந்தவர் திரேஷா ஜோசப்பின் ராணி (வயது 60). இவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திரேஷா ஜோசப்பின் ராணி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். பன்றி காய்ச்சலுக்கு பலியான திரேஷா ஜோசப்பின் ராணி ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story