வியாபாரி மீது தாக்குதல்; 2 பேர் கைது


வியாபாரி மீது தாக்குதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 9:30 PM GMT (Updated: 21 Oct 2018 11:29 PM GMT)

பண்ருட்டி பானிபூரி கடைகாரர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 49). இவர் பண்ருட்டி ரத்தினம்பிள்ளை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பண்ருட்டி பெரிய தர்கா உரூஸ் விழாவில் பாபு பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்தார். அப்போது பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த திருமாவளவன்(22), சரண்ராஜ்(24), அசுருதீன், தமிழ்செல்வன் ஆகியோர் பாபுவின் கடைக்கு பானிபூரி சாப்பிட வந்தனர். சாப்பிட்டு முடித்த பின்னர், அதற்கான பணத்தை அவர்கள் கொடுக்கவில்லை. பணத்தை அவர் கேட்ட போது, 4 பேரும் சேர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பாபு, தனது காய்கறி கடையில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவரை திருமாவளவன் உள்பட 4 பேரும் சேர்ந்து வழிமறித்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த பாபுவை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமாவளவன், அசுருதீன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் 2 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.

Next Story