செங்குணம் பிரிவு சாலைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


செங்குணம் பிரிவு சாலைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 7:10 PM GMT)

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து செங்குணம் பிரிவு சாலைக்கு செல்லும் பாதையை திறக்ககோரி செங்குணம் பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) அழகிரிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது பெரம்பலூர் தாலுகா செங்குணம் பொது மக்கள் கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், செங்குணம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதான சாலையாக உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் கைகாட்டியில் இருந்து செங்குணம் கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலைக்கு நேரடியாக செல்வதற்கு சாலையின் மையத்தின் வழியாக ஒரு பாதை இருந்தது. அந்த இடத்தில் தற்போது அடிக்கடி விபத்து நடந்து வருவதாக கூறி கடந்த சனிக்கிழமை போக்குவரத்து போலீசார் அந்த பாதையை இரும்பு தடுப்பு கம்பிகளை அடுக்கி வைத்து அடைத்து விட்டனர்.

இந்த பாதையை தான் செங்குணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரம்பலூரில் இருந்து வருவதற்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த பாதையினை அடைத்து விட்டதால் செங்குணம் பிரிவு சாலைக்கு அரை கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது பெட்ரோல்-டீசல் விலையும் உயர்ந்து விட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் மருத்துவ உதவிக்காக வரக்கூடிய ஆம்புலன்சுகள், மாணவர்களை ஏற்றி செல்ல வரும் பள்ளி வாகனங்கள், பெரம்பலூருக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் இந்த பாதை அடைக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது இரவு நேரங்களில் தான், அதற்கு காரணம் மின் விளக்குகள் இல்லாததே. எனவே இந்த பகுதியில் அதிகம் வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும். சாலையில் இரும்பு தடுப்புகளை வைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை தரக்கூடிய ரேடியம் விளக்குகளை வைத்து பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் கைகாட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாதையை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

வேப்பந்தட்டை தாலுகா தேவையூரில் வசிக்கும் பெண்கள் கொடுத்த மனுவில், பெண் ஒருவர் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து லாபம் பெற்று தருவதாக கூறி எங்கள் பகுதியை சேர்ந்த 250 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு 108 ஆம்புலன்சு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராஜ், செயலாளர் சுகுமாறன் கொடுத்துள்ள மனுவில், 108 ஆம்புலன்சில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை (போனஸ்) உயர்த்தி வழங்க வேண்டும். இல்லையென்றால் சங்கத்தின் தலைமை எடுத்த முடிவின் படி வருகிற 5-ந்தேதி இரவு 8 மணி முதல் 6-ந்தேதி (தீபாவளி அன்று) இரவு 8 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்படியும் கோரிக்கை நிறைவேற்ற படவில்லையெனில் 6-ந்தேதி இரவு 8 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story