‘வெல்டிங்’ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு: பாய்லர் ஆலையில் ரூ.1000 கோடி உற்பத்தி பாதிப்பு


‘வெல்டிங்’ தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு: பாய்லர் ஆலையில் ரூ.1000 கோடி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 11:00 PM GMT (Updated: 22 Oct 2018 7:27 PM GMT)

திருச்சி பாய்லர் ஆலையில் வெல்டிங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பால் ரூ.1000 கோடி உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாகவும், கோரிக்கைகளுக்கு தீர்வு காண கலெக்டரிடம் தொழிற்சங்கத்தினர் முறையீட்டு மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி பாய்லர் ஆலை ‘வெல்டர்ஸ்’ தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சையதுதாஜூதீன்மதானி தலைமையில் ‘வெல்டிங்’ தொழிலாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். மனு தொடர்பாக சையது தாஜூதீன்மதானி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி பாய்லர் ஆலையில் ‘வெல்டிங்’ பிரிவில் 1,050 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இதில் 950 பேர் உறுப்பினராக எங்களது சங்கத்தில் உள்ளனர். பாய்லர் ஆலையில் ஏற்கனவே பணிபுரிந்த வெல்டர்களுக்கு வழங்கியது போல தகுதி அடிப்படையில் முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒரு வெல்டர் 36 மாதங்கள் தொடர்ந்து வெல்டிங் ஊக்கத்தொகை பெற்றால் அதனை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். முறையான வெல்டிங் ஊக்கத்தொகை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளதால் வரையறுக்கப்பட்ட 30 சதவீத கணக்கில் உயர்த்தப்பட வேண்டும்.

பாதிப்பு தரக்கூடிய பணிச்சூழலில் பணிபுரியும் வெல்டர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் பாதுகாப்பான உபகரணங்கள் வழங்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தினோம். பாய்லர் ஆலை நிர்வாகத்திடம் எடுத்துக்கூறியும் நிறைவேற்றவில்லை. கடந்த 1-ந்தேதி முதல் 950 தொழிலாளர்களும் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் (அதாவது நேற்று)22-வது நாளாக நீடிக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேரை பணியிடை நீக்கம் செய்தும், 14 பேரை வெளிமாநிலத்திற்கும் மாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை ஆணைபெற்றுள்ளோம்.

பாய்லர் ஆலை நிர்வாகம் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து வருகிறது. பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தீர்வு காணவில்லை. இந்த வேலை நிறுத்தத்தால் ரூ.1000 கோடி வரை உற்பத்தி பணிகள் பாதிப்படைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண பாய்லர் ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். கலெக்டரும் உரிய கவனம் செலுத்தி 950 தொழிலாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என முறையிட்டுள்ளோம். எங்களது கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளோம். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இந்த போராட்டத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவாய்ப்பு இல்லை. ஒரு சில அதிகாரிகளின் முட்டுக்கட்டையால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாய்லர் ஆலை மறுத்துவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story