ஆறுமுகநேரியில் பரிதாபம் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


ஆறுமுகநேரியில் பரிதாபம் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:05 PM GMT)

ஆறுமுநேரியில், 2-வது மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரி இலங்கத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமணி. இவருடைய மகன் சுதாகர் (வயது 43). இவர் அங்குள்ள தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். பின்னர் சுதாகர் 2-வதாக செட்டியாபத்தைச் சேர்ந்த பொன் மலரை திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

சுதாகர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் பொன்மலர் தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சுதாகர் நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள தனது தந்தையின் கல்லறை அருகில் பூவரசு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சுதாகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story