செஞ்சி மல்லிநாதர் கோவிலில் கடத்தப்பட்ட 8 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு


செஞ்சி மல்லிநாதர் கோவிலில் கடத்தப்பட்ட 8 ஐம்பொன் சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 7:34 PM GMT)

செஞ்சி மல்லிநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட 8 ஐம்பொன் சிலைகள் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கின் விசாரணை வருகிற 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கும்பகோணம்,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் மல்லிநாதர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஜெயின் கோவிலான இக்கோவிலில் இருந்து ஐம்பொன்னால் ஆன 2 மல்லிநாதர் சிலைகள், 2 பார்சுவநாதர் சிலைகள், ஜோலா மாலினி, தரனேந்திரர், பத்மாவதி, விளக்கு ஏந்திய பெண் சிலை ஆகிய 8 சிலைகளை கடந்த செப்டம்பர் மாதம் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி செஞ்சி அருகே அப்பம்பட்டு காப்புக்காடு பகுதியில் 4 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை கைப்பற்றி போலீசார் விசாரித்தபோது, அந்த சிலைகள் மல்லிநாதர் கோவிலுக்கு சொந்தமானவை என்பது தெரிய வந்தது. மேலும் 4 சிலைகள் அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இருந்து நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சிலைகளை கோவிலில் இருந்து கடத்தியவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் செஞ்சி கண்ணகி நகரை சேர்ந்த தங்க நகைகள் செய்யும் தொழிலாளி மேகநாதன்(வயது 35), சிட்டாம்பூண்டியை சேர்ந்த சுரேஷ்(35), ராஜசேகர்(27), அலிபாஷா(24), மேல்களவாய் கிராமத்தை சேர்ந்த சந்தானகிருஷ்ணன்(32) ஆகிய 5 பேருக்கு சிலை கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இவர்களை பிடித்து விசாரித்ததில் 5 பேரும் சேர்ந்து மல்லிநாதர் ஜெயின் கோவிலின் பூட்டை உடைத்து 8 ஐம்பொன் சிலைகளை கடத்தி சென்றதும், சிலைகளை விற்க முடியாமல் செஞ்சி பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மேகநாதன், சுரேஷ், சந்தானகிருஷ்ணன், ராஜசேகர், அலிபாஷா ஆகியோரை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது மீட்கப்பட்ட 8 சிலைகளும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு நீதிபதி அய்யப்பன் பிள்ளை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

Next Story