அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 பேர் பலி


அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2018 11:34 PM GMT (Updated: 24 Oct 2018 11:34 PM GMT)

அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

அவினாசி,

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிவானந்தம் என்பவரது மகன் ஜெகதீஸ் (வயது 31). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பரும், பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தவருமான மாது (24) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் கோவை சென்றனர். பின்னர் அங்கிருந்து சேலத்திற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஜெகதீஸ் ஓட்டினார். பின் இருக்கையில் மாது அமர்ந்து இருந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர் களுக்கு பின்னால் கோவையில் இருந்து சேலம் சென்ற தனியார் பஸ் ஒன்று, அவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஜெகதீசும், அவருடைய நண்பர் மாதுவும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகதீஸ் பலியானார்.

மாதுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாதுவும் இறந்தார். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவினாசி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story