திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 500 பெண்கள் உள்பட 750 பேர் கைது


திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 500 பெண்கள் உள்பட 750 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 11:00 PM GMT (Updated: 29 Oct 2018 11:00 PM GMT)

திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். 500 பெண்கள் உள்பட 750 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் காத்திருப்பு போராட்டம் கடந்த 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை என 3 நாட்கள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் கடந்த 27-ந் தேதி மாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால், அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று காலை 11 மணி அளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அந்த பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, பழனி, செல்வி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சத்துணவு ஊழியர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு போளூர் - திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

போலீசார், பெண் சத்துணவு ஊழியர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றும் போது அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story