செய்யாறு அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளி உள்பட 3 பேரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை


செய்யாறு அருகே பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளி உள்பட 3 பேரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 29 Oct 2018 11:17 PM GMT (Updated: 29 Oct 2018 11:17 PM GMT)

பாலிடெக்னிக் கல்லூரிக்குள் புகுந்த 8 பேர் அடங்கிய முகமூடி கும்பல் காவலாளி உள்பட 3 பேரை தாக்கி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

செய்யாறு,

பாலிடெக்னிக் கல்லூரிக்குள் புகுந்த 8 பேர் அடங்கிய முகமூடி கும்பல் காவலாளி உள்பட 3 பேரை தாக்கி அறைக்குள் தள்ளி பூட்டி வைத்துவிட்டு ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாராசூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களாக எலக்ட்ரீசியன் வேலையை 2 பேர் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காவலாளி வஜ்ஜிரவேல் (வயது 52) என்பவர் பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 8 பேர் கும்பலாக கல்லூரிக்குள் புகுந்து காவலாளியையும், எலக்ட்ரீசியன் வேலை செய்த 2 பேரையும் சரமாரியாக தாக்கி, அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பிடுங்கிகொண்டு அவர்களை வகுப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.

அதை தொடர்ந்து மர்ம நபர்கள் கல்லூரி அலுவலக அறையின் பூட்டை உடைத்து உள்ளனர். பின்னர் உள்ளே சென்று, அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள், 3 பேரையும் பூட்டி வைத்திருந்த அறையின் முன்பு அவர்களுடைய செல்போன்களை வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதனையடுத்து நேற்று காலையில் பகல் காவலாளி கல்லூரிக்கு வந்தார். அப்போது அவர், வகுப்பு அறையின் முன்பு 3 செல்போன்கள் இருப்பதை பார்த்து அறையின் கதவை திறந்தார். உள்ளே காவலாளி வஜ்ஜிரவேல் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்த 2 பேர் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.

சம்பவம் பற்றி அறிந்த அவர், அதுபற்றி கல்லூரி தாளாளர் பி.நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் முகமூடி கும்பல் 8 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story