மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் பிரபாகர் தகவல்


மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2018 11:15 PM GMT (Updated: 30 Oct 2018 9:09 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தீவிர காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வ குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் 10 ஒன்றியங்களில் தீவிர காய்ச்சல், டெங்கு தடுப்பு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் ஒரு வட்டாரத்திற்கு 2 குழுக்கள் என அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 2 மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வாகனம் மற்றும் நடமாடும் மருத்துவ குழு வசதிகளுடன் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவ்வொரு கிராமமாக சென்று அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

டெங்கு காய்ச்சலை பரப்ப கூடிய கொசுவை ஒழிக்கவும், பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழிப்புணர்வு பணிகளும், சுற்று புற சுகாதார பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் விளைவாக மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

தற்போது 2 நாட்களாக மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் இல்லை. இருப்பினும் இந்த தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதற்காக பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. 2 மாதங்களுக்கு தட்ப வெட்ப நிலை மாறும் வரை இந்த குழுக்கள் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பணி மேற்கொள்ள உள்ளன. மாவட்ட அளவில் 22 குழுக்களும், ஒவ்வொரு வட்டாரங்களில் 20 பேர் வீதமும், பேரூராட்சிகளில் 20 பேர் வீதமும், ஒவ்வொரு நகராட்சி பகுதிகளில் மண்டல வாரியாக 20 பேர் வீதமும் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறத்தாழ 400 பணியாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல 30 நடமாடும் மருத்துவ வாகனம் 10 வட்டாரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுகாதார பணிகள் தலைமையில் அதி விரைவு சிகிச்சை குழு மாவட்டத்தில் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து சுகாதார விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்கள், மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். இதையடுத்து சுகாதார பணியாளர்கள், மாணவர்கள், டெங்கு நோய் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியல் வல்லுனர் டாக்டர் அனுராதா, நோய் தடுப்பு நிபுணர் டாக்டர் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story