பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் அர்ஜூன் மனு: கர்நாடக ஐகோர்ட்டில் நாளை விசாரணை


பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் அர்ஜூன் மனு: கர்நாடக ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 31 Oct 2018 10:36 PM GMT (Updated: 31 Oct 2018 10:36 PM GMT)

பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்துள்ள நடிகர் அர்ஜூனின் மனு, கர்நாடக ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

பெங்களூரு,

பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்துள்ள நடிகர் அர்ஜூனின் மனு, கர்நாடக ஐகோர்ட்டில் நாளை(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்’ என்ற படத்தில்(கன்னடத்தில் ‘விஸ்மய’ என்ற பெயரில் வெளியானது) நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தில் நடித்தபோது, நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று ‘மீ டூ’ இயக்கம் மூலம் சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதை அர்ஜூன் முற்றிலுமாக மறுத்தார்.

மேலும் இந்த புகாரால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி வழங்க நடிகை சுருதி ஹரிகரனுக்கு உத்தரவிடுமாறும் கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் அர்ஜூன் வழக்கு தொடர்ந்தார். நடிகர் அர்ஜூன் மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கொடுத்தார். அதன் பேரில் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் வக்கீல் பி.வி.ஆச்சார்யா, நேற்று ஐகோர்ட்டில் ஆஜராகி ஒரு ‘மெமோ’வை தாக்கல் செய்தார்.

அதில், அர்ஜூன் மீதான பாலியல் புகார் மிக தீவிரமானது என்றும், அதனால் இந்த வழக்கை இன்றே(அதாவது நேற்று) விசாரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அதன்பேரில் இந்த மனு மீது 2-ந் தேதி(அதாவது நாளை) விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தினேஷ்குமார் அறிவித்தார்.


Next Story