தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கம் - கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு


தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கம் - கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2018 10:50 PM GMT (Updated: 31 Oct 2018 10:50 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்படும் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.

பெங்களூரு,

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பிற இடங்களுக்கும், தமிழகம் உள்பட பிற மாநிலத்துக்கும் கூடுதலாக பஸ்கள் இயங்கும். வருகிற 11-ந் தேதி கர்நாடகத்தின் பிற இடங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து இந்த கூடுதல் பஸ்கள் பெங்களூருவுக்கு இயங்கும்.

அதன்படி, பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையத்தில் இருந்து உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, ராய்ச்சூர், தாவணகெரே, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கார்வார், கலபுரகி, பல்லாரி, கொப்பல், யாதகிரி, பீதர் ஆகிய மாவட்டங்களுக்கும், திருப்பதி உள்ளிட்ட பிற மாநிலத்தில் உள்ள இடங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயங்கும். மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, குடகு மாவட்டங்களும் பஸ்கள் செல்லும்.

பெங்களூரு விஜயநகரில் உள்ள பசவேஸ்வரா பஸ் நிலையம், ஜெயநகர் 4-வது பிளாக், ஜாலஹள்ளி கிராஸ், நவரங் (ராஜாஜி நகர்), மல்லேசுவரம் 18-வது கிராஸ், பனசங்கரி, ஜீவன்பீமா நகர், ஐ.டி.ஐ. கேட், கங்காநகர், கெங்கேரி சேட்டிலைட் டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஒரநாடு, குக்கேசுப்பிரமணியா, தர்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கும் பஸ்கள் செல்கின்றன.

மேலும், பெங்களூரு சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் உள்பட மேலும் சில இடங்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்துக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட 707 முன்பதிவு மையங்கள் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், தமிழகம் உள்ளிட்ட வேறு மாநிலங்களிலும் திறக்கப்பட்டு உள்ளன. www.ksrtc.in என்ற இணையதளம் வழியாகவும் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அத்துடன் 4 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒரே டிக்கெட்டில் பயணத்துக்கான முன்பதிவை செய்தால் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 5 சதவீதமும், கர்நாடக அரசு பஸ்சில் ஊருக்கு செல்வது மற்றும் திரும்புவதற்கான டிக்கெட்டை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும் சலுகையாக வழங்கப்படும்.

மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story