கோவை அரசு ஆஸ்பத்திரியில்: டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி - மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு


கோவை அரசு ஆஸ்பத்திரியில்: டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி - மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் சாவு
x
தினத்தந்தி 2 Nov 2018 9:45 PM GMT (Updated: 2 Nov 2018 9:00 PM GMT)

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள். மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கோவை, 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னரசம்பாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் சன்சியா (வயது 4). சிறுமி சன்சியாவுக்கு கடந்த 28-ந் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவளின் ரத்த மாதிரி மற்றும் சளியை பரிசோதித்த டாக்டர்கள் அவளுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவளை டாக்டர்கள் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் நாகராஜ் (62). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவரின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் நாகமணி (45). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர்.வேலூரை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கடந்த 31-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களின் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சலுக்கு 14 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 56 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு 1 வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர் சென்னையில் இருந்து நேற்று ஊட்டிக்கு வந்தார். பின்னர் அவர் ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மாணவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாணவரின் பெற்றோருக்கும் பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதா? என்று டாக்டர்கள் பரிசோதித்தனர். ஆனால் அவர்களுக்கு காய்ச்சல் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

Next Story