பெருமாநல்லூர் அருகே: வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது - மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்


பெருமாநல்லூர் அருகே: வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் கைது - மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 2 Nov 2018 10:30 PM GMT (Updated: 2 Nov 2018 11:04 PM GMT)

பெருமாநல்லூர் அருகே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெருமாநல்லூர்,

கோபிசெட்டிபாளையம் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது33). பனியன் நிறுவன தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு பொங்குபாளையம் ஆர்.எஸ்.புரம் அருகே தனது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் ஆனந்தராஜை தாக்கி அவரிடமிருந்து ரூ.1000 , செல்போன், வங்கி ஏ.டி.எம் கார்டு, தங்க மோதிரம் அனைத்தையும் மிரட்டி பறித்தார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை ஏற்றிக்கொண்டு பி.என் ரோடு நோக்கி வேகமாக தப்பிச்சென்றனர். அந்த சமயத்தில் ஆனந்தராஜூவுடன் வேலை செய்யும் 2 பேர் வேலை முடிந்து அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த வழிப்பறி சம்பவத்தை பார்த்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் மோட்டார்சைக்கிளில் விரட்டி சென்றனர். சிட்கோ அருகில் உள்ள வளைவு அருகில் அந்த 4 பேரும் தடுமாறி சாய்ந்து பின்னர் சுதாரித்து மீண்டும் வேகமாக தப்பிவிட்டனர். அப்போது வாகனத்தின் நம்பரை பார்த்து அவரது நண்பர்கள் உதவியுடன் பெருமாநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் புகார் கொடுத்தனர்.

பெருமாநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து வாகனத்தின் நம்பரை வைத்து அதன் உரிமையாளர் கணக்கம்பாளையத்தை ஜேசுராஜ் (20) என்பவரை பிடித்து விசாரித்த போது திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் உள்ள பிரியங்கா நகரை சேர்ந்த காதர்மீரான் (19), பொன்னம்மாள் நகரை சேர்ந்த கோபிநாத் (21), டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த யாசிக் (19), பூலுவபட்டி சவுடாம்பிகா நகரை சேர்ந்த ராஜா (19) ஆகியோர் மோட்டார்சைக்கிளை வாங்கி சென்றதாகவும், அதை அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து 4 பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தியதில் தனியாக செல்பவர்களை மிரட்டி வழிப்பறி செய்ததையும், தங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டவர் பற்றிய தகவல்களையும் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story