தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலில் திணறிய திண்டுக்கல்


தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலில் திணறிய திண்டுக்கல்
x
தினத்தந்தி 3 Nov 2018 11:30 PM GMT (Updated: 3 Nov 2018 10:42 PM GMT)

தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால், திண்டுக்கல் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.

திண்டுக்கல்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளிலும் சலுகை விலையை அறிவித்துள்ளன. மேலும் திண்டுக்கல் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

எனவே, தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திண்டுக்கல்லுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் திண்டுக் கல் நகருக்கு பொருட்களை வாங்க குவிந்தனர். அதில் கார்கள், மோட்டார்சைக்கிள்களில் பலர் வந்தனர். இதற்கிடையே மெயின்ரோட்டில் நான்குசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் பஸ்நிலையம், கடைவீதிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் பிற பகுதிகள் வழியாக சென்றன. மேலும் திண்டுக்கல் சாலைரோடு, ஆர்.எஸ்.ரோடு, ஏ.எம்.சி. ரோடு, சப்-கலெக்டர் அலுவலக ரோடு, தபால் நிலைய ரோடு, ஸ்கீம் ரோடு ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால், திண்டுக்கல் நகரம் திணறியது.

நகரின் முக்கிய வீதிகள், சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் திண்டுக்கல் நாகல்நகர் முதல் சாலைரோடு வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நேற்று மதியம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சாலைரோடு, ஆர்.எஸ்.ரோடு, சோலைஹால் ரோடு சந்திப்பு பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதேபோல் காமராஜர் பஸ்நிலையம் அருகே ஏ.எம்.சி ரோடு மற்றும் ஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதியிலும் நெரிசல் ஏற்பட்டது. கார்கள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த சந்திப்பை கடக்க முயன்றன. இதனால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

எனினும், திண்டுக்கல் நகருக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே, நெரிசலை தவிர்க்கும் வகையில் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் நகரில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story