வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரம் பறிப்பு - பட்டதாரி வாலிபர் கைது


வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரம் பறிப்பு - பட்டதாரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2018 10:58 PM GMT (Updated: 3 Nov 2018 10:58 PM GMT)

வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரத்தை பறித்துச்சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்,

வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்ற ஆசிரியரிடம் ரூ.80 ஆயிரத்தை பறித்துச்சென்ற பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோபி அருகே உள்ள தமிழ்நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 70). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். திருநாவுக்கரசு நேற்று முன்தினம் கோபியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றார். பின்னர் வங்கியில் இருந்து ரூ.80 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

அவரை பின்தொடர்ந்தபடி மர்மநபர் ஒருவர் சென்று சென்று கொண்டிருந்தார். திடீரென அந்த நபர் திருநாவுக்கரசு வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து வேகமாக ஓடினார்.

உடனே திருநாவுக்கரசு “திருடன், திருடன்” என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த நபரை துரத்தி சென்று பிடித்து கோபி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பவானி அருகே உள்ள தொட்டம்பாளையத்தை சேர்ந்த அருண்சுந்தர் (வயது 25) என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை விட்டுள்ளார். இதனால் செலவுக்கு பணம் இல்லாததால் திருநாவுக்கரசிடம் இருந்த பணத்தை பறித்துச்சென்றதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் அருண்சுந்தர், கோபி வேலுமணி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது வீடு புகுந்து மடிக்கணினியை திருடிச்சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.80 ஆயிரத்தை மீட்டனர்.


Next Story