வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 9 லட்சம் மோசடி 2 பேர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 9 லட்சம் மோசடி 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 4 Nov 2018 7:21 PM GMT)

கொள்ளிடம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சாமியம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் விமல்ராஜ்(வயது33). புதுப்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்்த ராமானுஜம் மகன் வேல்முருகன் (39). இவர்கள் இருவர்களும் நெல்லை மாவட்டம் வி.கே. புதூரை சேர்ந்த மகேந்திரன், கிருஷ்ணசாமி, பாஸ்கரன், இசக்கிசுடலை, சுப்ரமணியன், மணிகண்டன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த மு.மகேந்திரன் ஆகியோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்தை வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நெல்லை மாவட்டம் வி.கே புதூர் வடக்குதெருவை சேர்ந்த நடராஜன் மகன் மதிவாணன் (29) கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story