சிமெண்டு ஆலை தொழிலாளி சாவு இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டம்


சிமெண்டு ஆலை தொழிலாளி சாவு இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 8:25 PM GMT)

சிமெண்டு ஆலை தொழிலாளி சாவு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள நபருக்கு பணி வழங்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூரில் தனியார் சிமெண்டு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருங்களாகுறிச்சி கிராமம் கீழத்தெருவை சேர்ந்த தொழிலாளி சுப்ர மணியன் (வயது 45) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கன்வயர் பெல்டில் இருந்து சிதறி விழும் கரிகளை அள்ளி, பெல்டில் போட்டுக்கொண்டிருந்த போது தவறி பெல்டில் விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டகுடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்ர மணியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உறவினர்கள் ஆலை முன்பு வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுத்து இறந்த சுப்ரமணியன் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் உள்ள நபருக்கு பணி வழங்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதாகவும், வேலை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு சொல்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story