விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு எந்திர மையங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு எந்திர மையங்களை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 9:05 PM GMT)

கரூர் மாவட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்டு எந்திர மையங்களை அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுவினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் நீடித்த மானாவாரி விவசாய இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மானாவாரி தொகுப்புகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அல்லது கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அந்தந்த தொகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுவதற்காக, மதிப்பு கூட்டும் எந்திர மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது.

விளைபொருட்களை சுத்தப்படுத்துதல், தரம் பிரித்தல் விற்பனைக்கேற்ற வகையில் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான மதிப்புக்கூட்டும் எந்திரங்களின் கொள்முதல் மற்றும் பணி மூலதனத்திற்கான மொத்த தொகையில் 75 சதவீதம் அல்லது ரூ.10 லட்சம் இதில் எது குறைவோ அத்தொகை அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீத தொகை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்திக்குழுவின் பங்களிப்பாக செலுத்தப்பட வேண்டும். மேலும் மதிப்புக்கூட்டு எந்திரங்களை வேளாண் பொறியியல் துறையின் மூலம் விலை நிர்ணயம் செய்து அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் மதிப்புக்கூட்டு எந்திர மையம் அமைக்கப்பட்டு, பலவகையான எண்ணெயை பிழிந்தெடுக்கும் கருவிகள் (மரச்செக்குகள்) உள்ளிட்ட பல்வேறு எந்திரங்கள் வாங்கப்பட்டு லாபகரமான முறையில் இயங்கி வருவதால், விவசாயிகளிடம் வரவேற்பினை பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு இந்த மையங்களை அணுகி மதிப்புக்கூட்டப்பட்ட விளைபொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தற்போது 2-வது கட்டமாக 150 மதிப்புக்கூட்டு எந்திர மையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

இதில் கரூர் மாவட்டத்தில் 2 மதிப்புக்கூட்டு எந்திர மையங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புக் கூட்டும் எந்திர மையம் அமைக்க ஆர்வமுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மானாவாரி தொகுப்பு மேம்பாட்டு குழுவிடம் வழங்க வேண்டும். தொகுப்பு மேம்பாட்டுக்குழு, விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்யும்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், தாந்தோன்றிமலை, குளித்தலை, பசுபதிபாளையத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அதிகாரி அலுவலகங்களில், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தங்களது விண்ணப்பத்தினை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story