பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 10:35 PM GMT)

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஈரோடு, 

பவானி எலவமலை அருகே உள்ள கரைஎல்லப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதிகரிகள் அங்கு சென்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தியதாக டிராக்டர் உரிமையாளரான சென்னாநாயக்கனூரை சேர்ந்த பழனிசாமி (வயது 53) என்பவரை கைது செய்தனர். பின்னர் இவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பழனிசாமி தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு சித்தோடு போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கூறினார். அவர் இதுபற்றி ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் பழனிசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை கலெக்டர் பிறப்பித்தார். இதற்கான ஆணை கோபியில் உள்ள சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் மற்றொருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

சத்தியமங்கலம் மில்மேடு அம்மாநகரை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தில்குமார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் ஒருவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுசம்பந்தமாக சத்தியமங்கலம் போலீசார் அவரை கைது செய்து கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருந்தன. இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Next Story