கோத்தகிரி அருகே: கார்- சரக்கு வாகனம் மோதல்; தொழிலாளி பலி


கோத்தகிரி அருகே: கார்- சரக்கு வாகனம் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Nov 2018 9:45 PM GMT (Updated: 8 Nov 2018 6:54 PM GMT)

கோத்தகிரி அருகே மாடு மீது மோதிய கார், சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளி பலியானார். மேலும் டாக்டர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோத்தகிரி, 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கண்ணேரிமுக்கு பகுதியில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் அருண்குமார் (வயது 42). இவர் தனது உதவியாளர் ரெஜிதா (19) என்பவருடன் காரில் கட்டபெட்டு பகுதியில் இருந்து கோத்தகிரிக்கு சென்று கொண்டு இருந்தார். வரும் வழியில் கோத்தகிரி ஹேப்பிவேலி பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி சிவகுமார் (52) என்பவர் கோத்தகிரி செல்ல ‘லிப்ட்’ கேட்டு டாக்டர் காரில் ஏறினார்.

கார் கோத்தகிரி நோக்கி சென்று கொண்டு இருந்தபோது ஓரசோலை அருகே திடீரென ஒரு மாடு சாலையின் குறுக்கே சென்றது. மாடு மீது மோதாமல் இருக்க காரை டாக்டர் அருண்குமார் திருப்ப முயன்றார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் மாட்டின் மீது மோதி எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு இறந்தது.

மேலும் காரில் வந்த டாக்டர் அருண்குமார், ரெஜிதா, சிவக்குமார் மற்றும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வள்ளுவர் காலனியை சேர்ந்த டிரைவர் புலேந்திரன் (26) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் கேத்தி ஊராட்சி செயல் அலுவலர் நடராஜ் தனது ஜீப்பில் அந்த வழியாக சென்றார். உடனே அவர் விபத்தில் சிக்கியவர்களை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் சென்றார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மேல் சிகிச்சைக்காக டாக்டர் அருண்குமார், சிவக்குமார் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிவக்குமார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். சரக்கு வாகன டிரைவர் புலேந்திரன் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து நடந்த அதே இடத்தில் கடந்த ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது காட்டெருமை மீது மோதி உயிரிழந்தார். கோத்தகிரி பகுதிகளில் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர் விபத்து நடக்கிறது.

எனவே சாலையில் கால்நடைகளை சுற்றித்திரியவிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story