ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனியார் பஸ்சில் தவறவிட்ட ரூ.9 ஆயிரம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்


ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனியார் பஸ்சில் தவறவிட்ட ரூ.9 ஆயிரம் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 8:08 PM GMT)

பெரம்பலூரில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனியார் பஸ்சில் தவறவிட்ட ரூ.9 ஆயிரத்தை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 85). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது மனைவியுடன் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை

ராமநாதனும், அவரது மனைவியும் துறையூரில் இருந்து பெரம்பலூர் வழியாக விருத்தாச்சலம் செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். மாலை 6.30 மணியளவில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்து நின்ற போது, அதில் இருந்து அவர்கள் இறங்கினர்.

அப்போது ராமநாதன் ரூ.9 ஆயிரத்து 30 இருந்த பணப்பையை பஸ்சிலேயே தவற விட்டு விட்டு இறங்கி விட்டார். இதனால் பதறிப்போன ராமநாதன் பணப்பையை எடுக்க மீண்டும் பஸ்சின் அருகே அவசர, அவசரமாக நடந்து சென்றார். ஆனால் அந்த பஸ் புறப்பட்டு சென்றது. ஆனாலும் ராமநாதன் பஸ்சை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார். புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டு விருத்தாச்சலம் நோக்கி சென்று விட்டது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ராமநாதன் திகைத்து நின்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசனிடம் ராமநாதன் நடந்ததை கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் உடனடியாக இதுகுறித்து அந்த தனியார் பஸ்சின் பணிமனைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அந்த பஸ் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டார். அந்த பஸ் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்று பணிமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சென்னை- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் விமல்குமார், மகேந்திரன், முருகேசன் ஆகியோர் ரோந்து வாகனத்தில் அந்த தனியார் பஸ்சை பின்தொடர்ந்து வேகமாக சென்றனர். ரோந்து வாகனத்தை முருகேசன் ஓட்டினார்.

பின்னர் திருமாந்துறை சுங்கச்சாவடி தாண்டி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி போலீசார் உள்ளே ஏறி சோதனையிட்டனர். அப்போது பஸ்சின் இருக்கையின் கீழ் ராமநாதன் தவற விட்ட பணப்பை கிடந்தது. இதையடுத்து பணப்பையை போலீசார் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் நேற்று அந்த பணப்பையை

ராமநாதனிடம் ஒப்படைத்தார். அப்போது ராமநாதன் போலீசாருக்கு கண்ணீர் மல்க இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.மேலும் போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் பணப்பையை எடுத்து கொடுத்த போலீசாரை வெகுவாக பாராட்டினார்.

Next Story