சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 11:30 PM GMT (Updated: 8 Nov 2018 11:09 PM GMT)

சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 3,490 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,748 கட்டுப்பாட்டு எந்திரங்களும், சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 95 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 27 கட்டுப்பாட்டு எந்திரங்களும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அலுமினியம் மூடிகளை இரும்பு மூடிகளாக மாற்றுவதற்காக ஐதராபாத்தில் உள்ள இ.சி.ஐ.எல்.நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் அரசு கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 கன்டெய்னர் லாரிகள் மூலம் 2 துணை தாசில்தார்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான நவீன மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியின் கொலை வழக்கில் சிறுமியின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் முயற்சியை போலீசார் எடுத்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்திற்கான தேவைகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை முறையில் எந்த விதமான அசம்பாவிதங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.





Next Story