புதுச்சேரியில் பலத்த மழை


புதுச்சேரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 8 Nov 2018 11:43 PM GMT (Updated: 8 Nov 2018 11:43 PM GMT)

புதுவையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்கள் பெய்தது.

அதன்பின் மழை இல்லாமல் இருந்தது. தீபாவளி பண்டிகை தினத்தன்று கடும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால் அன்றையதினம் மழை பெய்யவில்லை.

இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில் புதுச்சேரியில் காலை சுமார் 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை லேசாகவும், பலமாகவும் விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது. பகல் 11 மணி வரை மழை நீடித்தது. அதன்பின் அவ்வப்போது சூரியன் தலைகாட்டுவதும், மீண்டும் மழை பெய்வதுமாக இருந்தது. மதியம் 2 மணிக்கு மேல் மழை பெய்வது நின்றது. ஆனால் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணிக்கே இருள் சூழ்ந்து காணப்பட்டது.

இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் முட்டளவு தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீர் மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றப்பட்டது. தற்போது பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story