வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி


வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 9 Nov 2018 11:15 PM GMT (Updated: 9 Nov 2018 10:22 PM GMT)

வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வலங்கைமான்,

வலங்கைமான் அருகே அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே புளியக்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 28 மாணவர்கள், 21 மாணவிகள் என மொத்தம் 49 மாணவ-மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக சுபா என்பவர் பணியாற்றி வருகிறார். உதவியாளராக பானுபிரியா, சமையலராக ராணி ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று மதியம் வழக்கம்போல் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் சத்துணவு சாப்பிட்டுள்ளனர். இதில் 19 மாணவ-மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவ- மாணவிகள் அனைவரையும் அங்கிருந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாந்தி-மயக்கம் ஏற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேலு மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர்கள் வலங்கைமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் சத்துணவு மற்றும் குடிநீரை சுகாதார துறையினர் ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு இதேபோன்று தரமற்ற சத்துணவு வழங்கப்பட்டதாகவும், காய்கறிகளில் புழு இருந்ததால் குழந்தைகள் சாப்பிடாமல் வீட்டுக்கு வந்து கூறியதால், இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினோம். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஒரு வாரமாக குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து விட்டு வந்தோம் என்றனர்.



Next Story