கொடுமுடி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்


கொடுமுடி அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:20 PM GMT (Updated: 9 Nov 2018 11:20 PM GMT)

கொடுமுடி அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊஞ்சலூர்,

கோபி, சென்னிமலை, கீரனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலுக்கு சென்றனர். இதற்காக வாடகைக்கு வேன் அமர்த்தியிருந்தனர். கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அனைவரும் நேற்று முன்தினம் மாலை வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள்.

வேனை சென்னிமலையை சேர்ந்த சத்தியராஜ் (வயது 25) ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி-ஈரோடு ரோட்டில் உள்ள வாழநாயக்கன்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது ரோட்டின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. உடனே வேனில் இருந்தவர்கள், “அய்யோ, அம்மா” என அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கோபியை சேர்ந்த குமாராயாள் (40), ஜெயந்தி, கண்ணம்மாள் (70), அருக்காணி (60), லட்சுமணன் (23), சண்முகம் (50), சாந்தி (40), மீனா (23) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இவர்கள் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story