சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:47 PM GMT (Updated: 9 Nov 2018 11:47 PM GMT)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டு தொடங்குவதால் அந்த நாளை இந்தியாவின் கருப்பு நாள் என அனுசரித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் பழைய பஸ்நிலையம் அருகே தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஆக்ஸ்போர்ட் ராமநாதன், மகிளா காங்கிரஸ் நிர்வாகி சாரதா தேவி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராகவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும், பணமதிப்பு இழப்பு தினத்தை கருப்பு நாளாக கடைபிடிப்பதாகக்கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, மெடிக்கல் பிரபு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநகர செயலாளர் யுவராஜ், விவசாய அணி பிரிவு மாநில செயலாளர் ஆரோக்கியநாதன், நிர்வாகிகள் அப்துல், ராஜா, சிவக்குமார், சாந்தமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதார சரிவு ஏற்பட்டது.

கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு என்று கூறிய பா.ஜனதா அரசு, அது அனைத்தும் சாத்தியம் ஆனதா? என்று சொல்லமுடியுமா?. பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு கருப்பு தினமாக கடைபிடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில் இருந்து புரிந்து கொள்ளலாம், என்றார்.

Next Story