சந்திரபாபு நாயுடு–ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் மணப்பாறையில் தம்பிதுரை பேட்டி


சந்திரபாபு நாயுடு–ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் மணப்பாறையில் தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 5:04 PM GMT)

சந்திரபாபு நாயுடு–ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்று மணப்பாறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தம்பிதுரை கூறினார்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று காலை கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் பணியை தொடங்க முடியாது. இருப்பினும் அ.தி.மு.க.நிர்வாகிகளை, தொண்டர்களை தயார் படுத்தி வருகிறோம். தேர்தல் பணி என்பது தேர்தல் நேரத்தில் தான் செய்ய முடியும். எந்த சூழ்நிலை வந்தாலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தணிக்கை குழு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. என்னை பொறுத்தவரை தணிக்கை குழு சரியான முறையில் செயல்பட்டிருந்தால் சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வெளிவந்து இருக்காது. இப்போது நீக்கிய காட்சிகளை ஏற்கனவே நீக்கி இருந்தால் பிரச்சினை வந்திருக்காது. மத்திய தணிக்கை குழுவைத் தான் குற்றம் சாட்டுகிறேனே தவிர மத்திய அரசை நான் குற்றம் சாட்டவில்லை. பா.ஜ.க. எங்களை குற்றம்சாட்டும் போது, பதிலுக்கு நாங்களும் குற்றம் சாட்டி வருகிறோம்.


ஏற்கனவே ஸ்டாலினை சந்தித்த சந்திரசேகரராவ் அமைதியாகி விட்டார். அதன்பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்போது சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். இதெல்லாம் அரசியலில் நடக்கும் நாடகங்கள். ஆனால், உள்ளுக்குள் நடக்கும் அரசியல் என்ன என்பது எங்களுக்கு தெரியும்.

பா.ஜ.க.–தி.மு.க ரகசிய கூட்டணி என்பது நான் பலமுறை கூறிவரும் நிலையில் அது உண்மையில்லை என்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலினை தெரிவிக்க சொல்லுங்கள் பார்ப்போம். அப்போது அந்த ரகசியம் உடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story