ஈரோடு அருகே துணிகரம் பெண்ணை கட்டிப்போட்டு 40 பவுன் நகை– ரூ.1 லட்சம் கொள்ளை


ஈரோடு அருகே துணிகரம் பெண்ணை கட்டிப்போட்டு 40 பவுன் நகை– ரூ.1 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 7:16 PM GMT)

ஈரோடு அருகே பெண்ணை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

மொடக்குறிச்சி,

ஈரோடு அருகே உள்ள 46 புதூர் நொச்சிக்காட்டுவலசு பிரியாதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்பாபு (வயது 48). இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தோல் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெசிமா பேகம் (45). இவர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து உள்ளார். இவர்களுடைய ஒரே மகன் அப்துல்ரகுமான் (26). இவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

நேற்று காலை ஜாபர்பாபு தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பிறகு ஜெசிமா பேகம் வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றார்.

இரவு 8.30 மணிஅளவில் ஜெசிமாபேகம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற சிறிது நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் திபுதிபுவென வீட்டிற்குள் நுழைந்தது. அவர்கள் கருப்பு நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தனர். மேலும் கண்கள் மட்டும் வெளியே தெரியும் அளவுக்கு முகமூடி போட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் ஜெசிமாபேகம் அதிர்ச்சியில் உறைந்தார்.

அந்த கும்பல் ஜெசிமாபேகத்தை சுற்றி வளைத்ததும், அவர் செய்வதறியாது திகைத்து நின்றார். உடனே முகமூடி கொள்ளையர்கள் அவருடைய கை, கால்களை கட்டினார்கள். மேலும், சத்தம் போடாமல் இருக்க வாயில் துணிகளை வைத்து பொத்தினார்கள். பின்னர் ஜெசிமா பேகத்தை கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்ட நகைகளை பறித்தனர். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையர்கள் அள்ளினார்கள். இதையடுத்து அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

கொள்ளையர்கள் தப்பி சென்றபிறகு பெரும் முயற்சி எடுத்து ஜெசிமா பேகம் வாயில் இருந்த துணியை துப்பினார். பின்னர் அவர் சத்தம் போட்டதும், அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அவர்கள் ஜெசிமாபேகத்தின் கை, கால்களில் போடப்பட்டு இருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் 40 பவுன் நகையையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளையர்கள் எந்த வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர்? அவர்கள் யார்? எங்கு தப்பி சென்றுள்ளனர்? என்று தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் சென்று, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெசிமாபேகத்தை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து ஆட்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்தநிலையில் மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story