தாம்பரம்– கொல்லம் இடையே தினசரி ரெயில் இயக்க வேண்டும்; தென்னக ரெயில்வேயிடம் வலியுறுத்தல்


தாம்பரம்– கொல்லம் இடையே தினசரி ரெயில் இயக்க வேண்டும்; தென்னக ரெயில்வேயிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:45 PM GMT (Updated: 10 Nov 2018 7:57 PM GMT)

தாம்பரம்–கொல்லம் இடையே தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

செங்கோட்டை–கொல்லம் இடையே அகலரெயில்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்பு தாம்பரம்–கொல்லம் இடையே வாரம் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும், மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று தாம்பரம்–செங்கோட்டை இடையே வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இருமுறை அறிவிக்கப்பட்ட பின்னரும் தாம்பரம்–செங்கோட்டை அந்தியோதையா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்னும் இயக்கப்படாத நிலையில் உள்ளது.

அகலரெயில்பாதையாக மாறுவதற்கு முன்பு கொல்லத்தில் இருந்து நாகூருக்கும், ராமேசுவரத்துக்கும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் அகலரெயில்பாதையாக மாற்றப்பட்டதிற்கு பின்பு இந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை. தற்போது உள்ள நிலையில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டியது அவசியம் ஆகிறது.

தற்போது வாரம் 3 முறை இயக்கப்பட்டு வரும் தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்டு வரும் தாம்பரம்–செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலும் டிசம்பர் 31–ந்தேதியுடன் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது. அந்த நிலை ஏற்பட்டால் சென்னை–செங்கோட்டை இடையே பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை தவிர வேறு ரெயில்கள் ஏதும் இயக்கப்படாத நிலை ஏற்படும்.

அடுத்துவரும் நாட்களில் சபரி மலைக்கு அதிகமாக பக்தர்கள் வடமாவட்டங்களில் இருந்து செங்கோட்டை வழியாக ரெயில்களில் தான் செல்லும் நிலை ஏற்படும். எனவே சென்னை– செங்கோட்டை மார்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டால்தான் பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்ல வசதியாக இருக்கும்.

எனவே தென்னக ரெயில்வே நிர்வாகம் தற்போது இயக்கப்பட்டு வரும் தாம்பரம்–கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், தாம்பரம்–செங்கோட்டை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலையும் நிரந்தரமாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதே போன்று சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலையும் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு பகுதி மக்களுக்கு வசதியாக தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

மதுரை–செங்கோட்டை இடையே தற்போது பகல் நேர பயணிகள் ரெயில்தான் இயக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் இருந்து இரவு மதுரைக்கு வந்து சேரும் பயணிகள் செங்கோட்டை வரை செல்வதற்கு மதுரை–செங்கோட்டை இடையே இரவு நேர பயணிகள் ரெயிலை இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story