திருமணமான 1½ ஆண்டில் பட்டதாரி பெண் தற்கொலை - டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை


திருமணமான 1½ ஆண்டில் பட்டதாரி பெண் தற்கொலை - டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 10:44 PM GMT)

திருமணமான 1½ ஆண்டுகளில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள அழகுபட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர், தாடிக்கொம்பு அருகே உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 23). பி.எஸ்சி., பிஎட் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, பிரவீன்யா என்ற 9 மாத குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் கணவன்-மனைவி தங்களது குழந்தையை, பழனியம்மாளின் தாயார் செந்தாமரையிடம் விட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும், மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் வந்து தியேட்டரில் சினிமா பார்த்தனர். அதன்பிறகு மாலையில் வீட்டுக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் வீட்டில் தூங்கினர்.

நள்ளிரவு 12 மணி அளவில் சரவணன் கண் விழித்து பார்த்தபோது, மின்விசிறியில் பழனியம்மாள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாமியார் செந்தாமரையிடம் சரவணன் தகவல் தெரிவித்தார். மேலும் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செந்தாமரை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பழனியம்மாளுக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அவ்வப்போது நடக்கிற சில சம்பவங்களை அவர் டைரியில் எழுதி வைத்துள்ளார். அந்த டைரி போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதன் ஒரு பக்கத்தில், நான் உன்னை விரும்புகிறேன். நான் உன்னை நம்பி திருமணம் செய்து கொண்டேன். ஏன் என்னை வெறுக்கிறாய்? என்று தனது கணவரை பற்றிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே பழனியம்மாளுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால், அவர் சாவுக்கான காரணம் குறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story