தமிழகத்திற்கு நிதி தராததால் நலத்திட்டங்கள் முடக்கம் மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றச்சாட்டு


தமிழகத்திற்கு நிதி தராததால் நலத்திட்டங்கள் முடக்கம் மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 8:53 PM GMT)

தமிழகத்திற்கு நிதி தராததால் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றம் சாட்டினார்.

கரூர்,

கரூர் காந்திகிராமம் பகுதியில் ரூ.269 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு 800 படுக்கைகள் வசதியுடன், 150 மாணவ-மாணவிகள் மருத்துவம் பயிலக்கூடிய வகையில் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் எந்த நிலையில் உள்ளது? எப்போது நிறைவடையும் என்பது குறித்து பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் இந்த பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தம்பிதுரை உத்தரவிட்டார். இந்த மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் முடிவுற்றால் கரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கரூரை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என அப்போது அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, மருத்துவ கட்டிடங்கள் செயற்பொறியாளர் இளஞ்செழியன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மகாவிஷ்ணு, வட்டாட்சியர் ஈஸ்வரன், மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் கூட தற்போது பொருளாதார பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்காக மோடி பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் அந்த திட்டங்களால் முழுமையான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது. முழு அதிகாரமும், முழு பொருளாதாரமும் மத்திய அரசிடம் இருக்க கூடாது. ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்களை கொண்டு வந்து மாநில அரசின் நிதியை எடுத்து கொள்வதை ஏற்க முடியாது. தற்போது ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டியுள்ளது. இந்த நிதியை தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதால்நலத் திட்டங்களை உரிய முறையில் செயல்படுத்த முடியாமல் முடங்கி கிடக் கின்றன.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்தால் தான் இந்தியா வலிமையடையும். பிராந்திய கலாசாரம், மொழிகளை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் சர்வ சிக்‌ஷா அபியான், பிரதம மந்திரி யோஜனா என திட்டங்களின் பெயரை இந்தியில் வைப்பது, பிற மொழி பேசும் மாநில மக்களுக்கு புரிவதில்லை. எனவே தமிழ்நாட்டில்தமிழ் மொழியிலான பெயரில் திட்டங்களை அறிவிப்பு செய்யவேண்டும். மேலும் 8-வது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளையும் மத்திய அரசு ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எங்களை போல் ஒத்த கருத்துடையவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். சந்திரபாபுநாயுடு-மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஒரு நாடகம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்வார்கள். இதே மு.க.ஸ்டாலின் மோடியை சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story