மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 9:30 PM GMT (Updated: 12 Nov 2018 7:40 PM GMT)

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல்.

குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு சம்பந்தமாக உள்ளிட்ட 288 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இவைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவரும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.69 ஆயிரத்திற்கான காசோலையையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருள்மணி, மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் ராமபிரதீபன் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் லட்சுமணன் மற்றும் கிரமத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– இளையான்குடி தாலுகா பனைக்குளம் கண்மாய் குடிமராமத்து திட்டத்தில், முழுமையாக மராமத்து பணி நடக்கவில்லை. எனவே குடிமராமத்துப்பணியை ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story