நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:04 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கோட்டை, 

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் மாசானம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் வள்ளி நன்றி கூறினார். ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் சேர்மபாண்டியன் தலைமை தாங்கினார். சுதர்சன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு அடங்கல் இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கார்த்திகை ராஜன் நன்றி கூறினார்.

அம்பை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் மோகன் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

மைக்கேல், சந்தோஷ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மஞ்சுசித்ரா நன்றி கூறினார். திசையன்விளை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story