35 நாட்களாக மின்சாரமின்றி தவிக்கும் வாழையூர் கிராம மக்கள் நடவடிக்கை கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


35 நாட்களாக மின்சாரமின்றி தவிக்கும் வாழையூர் கிராம மக்கள் நடவடிக்கை கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 8:41 PM GMT)

மின்சாரம் இல்லாமல் 35 நாட்களாக வாழையூர் கிராம மக்கள் தவித்து வருவதாகவும், எனவே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது மண்ணச்சநல்லூர் தாலுகா வாழையூர் கிராம மக்கள் சார்பில் அனந்தநாராயணன் என்பவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

வாழையூர் கிராமத்தின் ஒரு பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் மின்மாற்றி 60 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த 35 நாட்களாக எங்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் தோட்ட வீடுகளுக்கு மின் வினியோகம் இல்லை. ஒரு நாளைக்கு 2 அல்லது 2½ மணி நேரம் மின்சாரம் வந்தாலும், அது குறைந்த அழுத்த மின்சாரமாக வருவதால் இரவு நேரங்களில் நாங்கள் குடும்பத்துடன் அவதிப்பட்டு வருகிறோம். இருட்டில் வாழும் எங்கள் குழந்தைகள், பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் தினமும் அச்சப்பட்டு வருகிறார்கள். மின்சாரம் இல்லாமல் மோட்டார்களை இயக்க முடியாததால் கிணற்று பாசனத்தை நம்பி சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் கருகி போய்விட்டன. எனவே மின்மாற்றியை பழுது பார்த்து எங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

திருவெறும்பூர் தாலுகா நவல்பட்டு கிராமம் காவேரி நகரில் வசித்து வருபவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் பகுதியை தற்போது அரசு புறம்போக்கு தரிசு நிலம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தவறாக கணக்கு காட்டி வருகிறார்கள். நாங்கள் குடியிருந்து வரும் மனைப்பிரிவுகள் கிரையம் செய்யப்பட்டவை. அதற்கு பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. எனவே தவறான தகவல்களை தெரிவித்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி இருந்தனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் திருவெறும்பூர் மண்டல தலைவர் சக்திவேல் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நவல்பட்டு அண்ணாநகரில் சாலை வசதி செய்து தரவேண்டும். நகர் முழுவதும் மண்டி கிடக்கும் குப்பைகள், சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். தெரு நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கொடுத்த மனுவில், உய்யகொண்டான், கட்டளை, அய்யன் வாய்க்கால்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் பச்சை நிறத்தில் செல்கிறது. ஈரோடு- கரூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து திறந்து விடப்படும் கழிவு நீரால் இந்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மணல் கடத்தல் பிரச்சினையில் சிக்கிய தாசில்தார் ரேணுகா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. திருவானைக்காவலை சேர்ந்த இன்பவள்ளி என்ற பெண், தனது தந்தை ராணுவத்தில் பணியாற்றி இறந்து விட்டார். ராணுவ வீரரான சகோதரரும் இறந்து விட்டதால், தற்போது தனக்கு பாதுகாப்புக்கு யாரும் இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும், என்று கோரி மனு கொடுக்க வந்தார். போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story