முத்துப்பேட்டையில் ஆற்றில் தி.மு.க. தொண்டர் பிணம் போலீசார் விசாரணை


முத்துப்பேட்டையில் ஆற்றில் தி.மு.க. தொண்டர் பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Nov 2018 10:15 PM GMT (Updated: 12 Nov 2018 9:13 PM GMT)

முத்துப்பேட்டையில் ஆற்றில் தி.மு.க. தொண்டர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மன்மதன்(வயது70). தி.மு.க. தொண்டர். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுக்கூர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாறு சட்ராஸ் ஆற்றில் நேற்று காலை முதியவர் பிணம் கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர் சட்டை பையில் இருந்த டைரியை எடுத்து பார்த்த போது பிணமாக கிடந்தது தி.மு.க. தொண்டர் மன்மதன் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் தவறி விழுந்து மன்மதன் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story