மயிலாடுதுறை அருகே விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை லாரி டிரைவர் கைது


மயிலாடுதுறை அருகே விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 10:15 PM GMT (Updated: 13 Nov 2018 7:13 PM GMT)

மயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகையை சேர்ந்தவர் சேகர்(வயது 58). பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரகாஷ்(44). லாரி டிரைவர். இவர்களின் வீட்டின் பின்புறத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கட்டுவதில் இடப்பிரச்சினை தொடர்பாக பிரகாசுக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், விறகு கட்டையால் சேகரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சேகரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சேகர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பிரகாசை கைது செய்தனர். 

Next Story