பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் மறியல் 182 பேர் கைது


பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் மறியல் 182 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 8:00 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

மின் ஊழியர்களின் மத்திய அமைப்பான சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் மின்வாரியத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலியாக ரூ.350 வழங்க வேண்டும். போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க வேண்டும். ஒப்பந்தமுறையில் மின்வாரியமே நேரடியாக ஒப்பந்த பணிகளை செய்திட வேண்டும். வருகைப்பதிவேடு பராமரித்து அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

அதன்படி பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை பேசினார். மாநில துணை தலைவர் அகஸ்டின், கோட்ட செயலாளர் பன்னீர்செல்வம், துணைதலைவர் நல்லுசாமி, வட்ட பொருளாளர் தமிழ்செல்வன், அரியலூர் ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 182 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டம் காரணமாக புதிய பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப் பட்டனர். 

Next Story