மனைவியை கொலை செய்து ஆற்றில் பிணம் வீச்சு ராணுவ வீரர், பெற்றோருடன் கைது


மனைவியை கொலை செய்து ஆற்றில் பிணம் வீச்சு ராணுவ வீரர், பெற்றோருடன் கைது
x
தினத்தந்தி 15 Nov 2018 10:30 PM GMT (Updated: 15 Nov 2018 8:25 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மனைவியை கொலை செய்து ஆற்றில் பிணத்தை வீசி சென்ற ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த அம்மாச்சியாபுரம் அருகே வைகை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு சுமார் 30 வயது பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் கண்ணன் என்பவருடைய மனைவி முருகலட்சுமி (வயது 34) என்றும், அவருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கண்ணனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், முருகலட்சுமியை அவர் கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கண்ணன் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த முருகலட்சுமிக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரேம்நாத் (14), ஹரிபிரசாத் (10) என 2 மகன்கள் உள்ளனர். ஆண்டிப்பட்டி பாலாஜி நகரில் வசித்து வந்துள்ளனர். முருகலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டது.

அந்த நபருடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முருகலட்சுமி வெளியூருக்கு சென்று விட்டார். பின்னர் உறவினர்கள் சென்று அவரை அழைத்து வந்து ராமலிங்காபுரத்தில் உள்ள கண்ணனின் பெற்றோர் வீட்டில் தங்க வைத்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அந்த நபருடன் முருகலட்சுமி குழந்தைகளுடன் சென்றார். கண்ணனின் வீடு மற்றும் சொத்துகள் முருகலட்சுமி பெயரில் இருந்தது. அதனை முருகலட்சுமி விற்க முயன்றார். இதுகுறித்து கண்ணனுக்கு தகவல் தெரிந்தது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ராமலிங்காபுரத்துக்கு கண்ணன் வந்தார். பின்னர் மனைவி எங்கு இருக்கிறார் என்று தேடினார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் முருகலட்சுமி பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்ற முயன்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைகளின் பள்ளி சான்றிதழ்களை வாங்குவதற்கு ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு முருகலட்சுமி வந்தார். இதையறிந்த கண்ணன் பள்ளிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து முருகலட்சுமியை அழைத்து கொண்டு ஒரு ஆட்டோவில் ராமலிங்காபுரத்துக்கு சென்றார். வீட்டில் அவருக்கும், முருகலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், சுடிதார் துப்பட்டாவால் முருகலட்சுமியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் தனது தந்தை சாமிக்கண்ணுவுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வைத்து அவருடைய உடலை கொண்டு சென்று வைகை ஆற்றில் வீசியுள்ளார். இதற்கு அவருடைய தாயார் ராஜம்மாளும் உடைந்தையாக இருந்துள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கண்ணன், அவருடைய தந்தை சாமிக்கண்ணு, தாயார் ராஜம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Next Story