சென்னை அண்ணாநகரில் விபத்து: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


சென்னை அண்ணாநகரில் விபத்து: படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 15 Nov 2018 9:45 PM GMT (Updated: 15 Nov 2018 9:45 PM GMT)

சென்னை அண்ணாநகரில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் மேல்பாடி முத்துத் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(வயது 24). இவருடைய மனைவி நந்தினி. இவர் 2 மாத கர்ப்பிணி ஆவார். கடந்த 6-ந்தேதி ராஜேஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கத்தில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி சென்றார்.அண்ணாநகர் போக்குவரத்து பணிமனை அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பில் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அங்கிருந்தவர்கள் ராஜேஷ் குமாரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே ராஜேஷ் குமாருக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால்தான் அவர் இறந்ததாக ராஜேஷ் குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் ராஜேஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜேஷ் குமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். பின்னர் ராஜேஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story