விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை : வெங்கையா நாயுடு பேச்சு


விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை : வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2018 11:00 PM GMT (Updated: 15 Nov 2018 11:00 PM GMT)

பயிர்க்கடன் தள்ளுபடி தற்காலிகமானது, விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்கள் தேவை என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

விவசாய துறைக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. பயிர்க்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் போன்ற தற்காலிக நடவடிக்கை உங்களின் துயரை துடைக்க உதவாது. விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலையும், சரியான உள்கட்டமைப்பு வசதியும், குறைந்த வட்டியில் கடன் வசதியும் தான் முக்கிய தேவைகளாகும்.

இருப்பினும் அரசியல் காரணங்களுக்காக தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயத்தை ஊக்குவிக்க நீண்டகால திட்டங்களில் அரசுகவனம் செலுத்த வேண்டும்.

விவசாயம் செய்ய முடியாததால் கிராமத்தில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வதாக கூறுகிறார்கள். நகரமயமாதலை தடுத்து நிறுத்துவது கடினமானதாகும். தற்போது கூட 56 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பி தான் உள்ளனர்.

என்னை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துவதே விவசாயத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான சிறந்த வழியாகும்.

பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டிற்குள் விவசாய வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இது ஒரு உன்னதமான திட்டம். இருப்பினும் அவ்வளவு எளிதானது இல்லை.

அரசு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்துள்ளது. ஆனால் இதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் சிறு, குறு விவசாயிகளுக்கும் சென்றடைய கூட்டுறவு சங்கங்கள் உதவவேண்டும்.

இந்தியாவின் கூட்டுறவு சங்கம் உலகிலேயே மிகப்பெரியது. பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு அது உதவியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story