மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 7:03 PM GMT)

மன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருவாகுறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் கஜா புயல் தாக்குதலினால் கடும் சேதம் ஏற்பட்டு குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். மின் வினியோகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மன்னார்குடியை அடுத்த மேலவாசலில் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டு குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் ஸ்ரீதேவி சிவானந்தம், மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-தஞ்சை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story