புயலுக்கு பிறகும் தொடரும் சோகம்: கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு


புயலுக்கு பிறகும் தொடரும் சோகம்: கொடைக்கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:30 PM GMT (Updated: 18 Nov 2018 9:21 PM GMT)

புயலுக்கு பிறகும் கொடைக் கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி கொடைக்கானல் அருகே மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலின் தாக்கத்தால் கனமழை பெய்தது. சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ‘கஜா’ புயல் புரட்டி எடுத்ததால், கொடைக்கானல் தனித்தீவானது.

கனமழையால், வத்தலக் குண்டுவில் இருந்து கொடைக் கானல் செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசாரின் துரித நடவடிக்கையால் மண்சரிவு சீரமைக் கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை, கொடைக்கானல் அருகே உள்ள குருசடி அருகே மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வத்தலக்குண்டு- கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மண்சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் வகையில் முதற்கட்டமாக மணல் மூட்டைகளை அடுக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில் பாறைகள் அதிகம் இருந்தது. பாறைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்க கூடாது என்பதால், மலைப்பாதையை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து எந்திரங்கள் மூலம் பாறைகளை துளையிட்டு, அதில் கான்கிரீட் கலவையை கொட்டி, அதன் மேல் மணல் மூட்டைகளை அடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாறைகளை துளையிடும் பணி தொடங்கியது.

நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அந்த பகுதியில் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் மலைப்பாதையை சீரமைக்கும் பணியில் இடையூறு ஏற்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால், மலைப்பாதை சீரமைப்பு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த பாதை வழியாக தற்போது இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்ல கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை குருசடி பகுதியில் மீண்டும் சீரமைப்பு பணிகள் தொடங்கி, மாலைக்குள் சரிசெய்யப்படும். அதன்பின்னர் வத்தலக்குண்டு-கொடைக் கானல் மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் பெரும்பாறை, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர் போன்ற கீழ்மலைப்பகுதிகளில் கஜா புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும் கே.சி.பட்டி-பெரியூர் இடையே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜோதிபாஸ், ஒட்டன்சத்திரம் உதவி பொறியாளர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் விரைந்து வந்து அறுவை எந்திரம் மூலம் மரத்தை அறுத்து, பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 25 பேர் சாலை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த பணிகளை மதுரை வட்டம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் பழனி கோட்ட பொறியாளர் ரமேஷ், ஒட்டன்சத்திரம் உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்று இருந்தனர்.

கனரக வாகனங்களுக்கு 2 நாட்கள் தடை

வத்தலக்குண்டு-கொடைக் கானல் மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவால் மலைப்பாதையின் அகலம் குறைந்துள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அந்த பாதை வழியாக தற்போது இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக வத்தலக்குண்டு -கொடைக்கானல் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல 2 நாட்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது, என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.




Next Story