புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிட்டு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் முத்தரசன் பேட்டி


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிட்டு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 8:18 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிட்டு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார். மேலும் புதுக்கோட்டை போஸ் நகர், காமராஜபுரம் கீழ 3-ம் வீதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடைபெற்று வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் பகுதிகளாக மத்திய அரசு அறிவித்து இயற்கை பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக நிவாரண பணிகளை தொடங்க வேண்டும். மின்தடை கடந்த 4 நாட்களாக உள்ளதால் பொதுமக்கள் மெழுகுவர்த்தி கூட கிடைக்காமல் அவதிப்படும் ஒரு சூழ்நிலையில், மாநில அரசு உடனடியாக விலையில்லா மண்எண்ணெயை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளவர்களை நிலைமை, சீரடையும் வரை அவர்களை முகாமை விட்டு வெளியே அனுப்பாமல் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்பு பணியில் மீட்பு குழுவினரை வரவழைத்து மீட்பு பணியை விரைவுபடுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், அரசியல் செய்யாமல் மக்கள் மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டும். இதே போன்று சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் ஆகியோருடன் இணைந்து மீட்பு பணிகளை மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக குழு அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story