நாகர்கோவிலில் கூட்டுறவு வாரவிழா விழிப்புணர்வு பேரணி மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் கூட்டுறவு வாரவிழா விழிப்புணர்வு பேரணி மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 4:53 PM GMT)

நாகர்கோவிலில் நடந்த கூட்டுறவு வாரவிழா விழிப்புணர்வு பேரணியை மண்டல இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

65–வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கூட்டுறவு வாரவிழாவையொட்டி நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பிளாஸ்டிக்கை ஒழித்து மாசற்ற சூழலை உருவாக்க வேண்டும், மழைநீரை சேகரிக்க வேண்டும், மரம் வளர்க்க வேண்டும், சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஏடிஸ் கொசுக்களை ஒழித்து டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வேண்டும், கிராமங்கள் தோறும் கூட்டுறவை வளர்த்து விவசாயத்தை பெருக்க வேண்டும், பால் உற்பத்தியை பெருக்கி, வெண்மைப்புரட்சியை ஏற்படுத்த வேண்டும், கைத்தறி ஆடை அணிந்து கூட்டுறவு நெசவாளர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

பேரணியை மண்டல இணைப்பதிவாளர் நடுக்காட்டு ராஜா தொடங்கி வைத்தார். இதில் குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா, துணைப்பதிவாளர்கள் சுப்பையா, சங்கரன், பாலசுப்பிரமணியன், சாமி, ராஜேந்திரன், கனகராஜ், பொன்னையா மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி கோர்ட்டு ரோடு வழியாக வேப்பமூடு சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர்.

Next Story