இருக்க இடம் இல்லை; குடிக்க தண்ணீர் இல்லை வீடுகளை இழந்து மாற்றுத்துணி இல்லாமல் முகாம்களில் பரிதவிக்கும் மக்கள்


இருக்க இடம் இல்லை; குடிக்க தண்ணீர் இல்லை வீடுகளை இழந்து மாற்றுத்துணி இல்லாமல் முகாம்களில் பரிதவிக்கும் மக்கள்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 6:48 PM GMT)

கஜா புயலினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி கிராம மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், மாற்றுத்துணி இல்லாமலும் முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள்.

வேதாரண்யம்,

கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் தொழிலாளர்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சுமார் 6,500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகள் குடிசை வீடுகள் ஆகும்.

இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. குடிசை வீடுகள் தரைமட்டமாகி விட்டன. ஓட்டு வீடுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் அகஸ்தியம்பள்ளி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகஸ்தியம்பள்ளியில் உள்ள கோவில், பள்ளிக்கூடம் உள்பட நான்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கி உள்ளவர்கள், கஜா புயலால் தாங்கள் வீடு, வாசலையும், உடமைகளையும் இழந்து விட்டதுடன் இருக்க இடம் இல்லாமலும், குடிக்க தண்ணீர் இல்லாமலும் மாற்றுத்துணி கூட இல்லாமலும் தவித்து வருவதாக கூறினார்கள்.

இதுகுறித்து அகஸ்தியம் பள்ளியை சேர்ந்த தொழிலாளி வாசு கூறிய தாவது:-

அகஸ்தியம் பள்ளியில் உள்ள அனைவருமே உப்பள தொழிலாளர்கள் ஆவர். இங்கு சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உப்பளங்களில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இந்தப் புயலின் காரணமாக எங்கள் கிராமமே அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளன. கடுமையான பாதிப்பை எங்கள் கிராமம் சந்தித்துள்ளது.

தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. மழையும் பெய்து வருவதால் எங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நாங்கள் தவித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த ராசாத்தி கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருமே உப்பளத் தொழிலாளர்கள் ஆவார்கள். புயல் காரணமாக வீடுகளை இழந்தும், உடைமைகளை இழந்தும் முகாம்களில் தங்கியுள்ளோம். நாங்கள் வசித்து வந்த குடிசை வீடுகள் அனைத்தும் புயலுக்கு சிதைந்து போய் விட்டது. சமைத்து சாப்பிடுவதற்கு பாத்திரங்கள் கூட கிடையாது. மாற்றுத்துணி கூட இல்லாமல் கடந்த நான்கு நாட்களாக ஒரே துணியை கட்டிக்கொண்டு இருக்கிறோம். முகாம்களில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகவும் கஷ்்டப்பட்டு வசித்து வருகிறோம். எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் அரசு வீடுகளைக் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த சுசீலா கூறியதாவது:-

அகஸ்தியம்பள்ளியில் உள்ள அனைத்து குடிசை மற்றும் ஓட்டு வீடுகளும் புயலினால் கடுமையாக சேதமடைந்துள்ளன. அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் நாங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறோம். 5 நாட்களாகியும் அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.

நாங்கள் இதுவரையில் உப்பு தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டு இருந்தோம். கடந்த 4 நாட்களாக அந்த தண்ணீர்கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. பல வீடுகளில் உள்ளவர்கள் வீடுகளை காலி செய்யும் நிலை உள்ளது. புயல் காரணமாக கடுமையான பொருளாதார சரிவை சந்தித்துள்ளன நாங்கள் இதிலிருந்து எப்படி மீண்டு வர போகிறோம் என்று தெரியவில்லை. எனவே அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story