மழையால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் பயணம் ரத்து: திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிக்கு மீண்டும் செல்வேன்


மழையால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் பயணம் ரத்து: திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிக்கு மீண்டும் செல்வேன்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:00 PM GMT (Updated: 20 Nov 2018 6:59 PM GMT)

மழையால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டதாகவும், திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிக்கு மீண்டும் செல்வேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சி,

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளை நேற்று பார்வையிடச் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சாய்ந்த மரங்கள் அகற்றம்

‘கஜா’ புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரத்திலும், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் ‘கஜா’ புயலால் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கின்றன. புதுக்கோட்டை நகரத்தில் பல ஆண்டு காலமாக இருந்த மரங்கள் கூட வேரோடு சாய்ந்து, அந்த சாய்ந்த மரங்களை எல்லாம் இன்றைய தினம் அப்புறப்படுத்தி இருக்கின்றோம். புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதியில், குடிசை பகுதியில் வாழ்ந்த மக்களை எல்லாம் முகாம்களில் தங்கவைத்த காரணத்தினாலே, பாதிப்பு குறைந்திருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்கி வருகிறது. இப்புயலால் முழுவதும் சேதம் அடைந்த, குடிசையில் வாழ்ந்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

இன்று மாலைக்குள் மின் இணைப்பு

கேள்வி:- புயல்சேத விவர முழு கணக்கீடு எப்பொழுது முடியும்?.

பதில்:- மின்கம்பங்கள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது. நேற்றைய தினம் 86 ஆயிரமாக இருந்தது, இன்றைக்கு காலையில் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சாய்ந்திருப்பதாக கணக்கீடு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், டிரான்ஸ்பார்மர், துணை மின்நிலையம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவைகளை எல்லாம், வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வருகை தந்து, இங்கேயே தங்கி, சரிசெய்து கொண்டிருக்கின்றார்கள். நாளைக்குள் (இன்று) நகரம் முழுவதற்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும்.

போர்க்கால அடிப்படையில் பணி

கேள்வி:- பல கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் போய்ச் சேராததால் மக்கள் கோபத்துடன் இருப்பதைப் பார்க்க முடிகிறதே?.

பதில்:- ‘கஜா’ புயல் வருவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கெல்லாம் புயல் பாதிப்பு இருக்கும் என்று தெரிந்ததோ, அங்கெல்லாம், என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர்கள் மூலமாக எல்லா இடத்திற்கும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘கஜா’ புயல் கோரத்தாண்டவம் ஆடிவிட்டது, கடுமையான சேதத்தை விளைவித்துவிட்டது. இருந்தாலும், அரசு மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு முழு மூச்சுடன் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

கேள்வி:- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வரவேற்றது, இப்பொழுது குறை சொல்கிறார்களே?.

பதில்:- இது இயற்கைச் சீற்றம். இதேபோல கேரளாவில் வந்தபோது நிவாரணப் பணிகள் எல்லாம் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகியது. அங்கே, எந்த எதிர்க்கட்சிகளும் எந்தவித பிரச்சினையையும் எழுப்பவில்லை. அனைவரும் ஒன்றாக இணைந்து, நம்முடைய மக்கள் பாதிப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யவேண்டும் என்ற மனப்பாங்கு அங்கே இருந்தது. இங்கே இருக்கும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை, நான் என்ன சொல்வது? இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஒவ்வொருவரும் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ளவேண்டும். அரசாங்கம் மட்டுமல்ல, அனைத்து மக்களுமே, நம்முடைய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும், துன்பமான இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று அனைத்துத் தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.

வித்தியாசம் பாராமல், கட்சி பாகுபாடு இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அதேபோல, இந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வருகின்ற அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அப்பொழுதுதான், வேகமாக, துரிதமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். அதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், அந்தப் பணியில் சுணக்கம் ஏற்படும். ஆகவே, பொதுமக்களும், அங்கு பணிசெய்கின்ற அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

‘கஜா’ புயல் பாதிப்புகளை பார்வையிட்டு திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனமழையால் இறங்க முடியவில்லை

பட்டுக்கோட்டையில் ‘கஜா’ புயலினால் தென்னை மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்த இடத்திற்குச் சென்று, நேரடியாகப் பார்வையிட்டு, அந்த விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லி, அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி திருவாரூர் சென்றோம்.

திருவாரூர் சென்று இறங்குகின்ற சமயத்தில் கடும் மழை. அந்த மழையின் காரணமாக ஹெலிகாப்டர் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினாலே, அங்கிருந்து நாகப்பட்டினம் செல்லலாம் என்று திட்டமிட்டுச் சென்றபொழுது, அங்கேயும் கனமழை பொழிந்த காரணத்தினாலே அங்கேயும் இறங்க முடியாத ஒரு சூழ்நிலை.

மீண்டும் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்லி, சேதமடைந்த பகுதிகளை பார்வையிட செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

தாமதமாக வந்தது ஏன்?

கேள்வி:- எப்பொழுது செல்வீர்கள்?.

பதில்:- பின்னர் அறிவிக்கப்படும்.

கேள்வி:- அதுவும் ஹெலிகாப்டரில்தான் செல்வீர்களா?.

பதில்:- அந்த சூழ்நிலையை பொறுத்து.

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்துடைப்பு நாடகம் என்றும், புயல் வந்த அடுத்த நாளே பார்வையிட செல்லவில்லை என்றும் சொல்லியிருக்கின்றாரே?.

பதில்:- புயல் முடிந்து அடுத்தநாளே எப்படித் தெரியும்?. 2, 3 நாட்கள் கழித்தால்தான் சேதத்தைப் பார்க்க முடியும், கணக்கிட முடியும். அவர் எதிர்க்கட்சித்தலைவர், உடனே வந்து பார்த்து சென்று விடுவார், நாங்கள் அப்படியல்ல. புயலால் பாதிக்கப்பட்ட பகுதி, எந்தெந்த பகுதிகள்? எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றது? என்பதை அதிகாரிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகள் எல்லாம் எடுத்த பிறகு, அந்தப் பணிகளை எல்லாம் முடுக்கிவிட்ட பிறகுதான் அங்கே செல்ல முடியும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story