கார்த்திகை தீபத்திருவிழா: நாமக்கல்லில் அகல்விளக்கு விற்பனை சூடுபிடித்தது பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்


கார்த்திகை தீபத்திருவிழா: நாமக்கல்லில் அகல்விளக்கு விற்பனை சூடுபிடித்தது பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 7:23 PM GMT)

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் அகல்விளக்கு விற்பனை சூடுபிடித்தது. குறிப்பாக இதை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

நாமக்கல்,

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். மேலும் கோவில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முடிவடைந்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் நகரில் நேற்று கடைவீதி, மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் அகல் விளக்குகளை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

மேலும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட இந்த விளக்குகள் நாமக்கல் நகரில் சாலையோரம் தாமரை பூ, குத்துவிளக்கு என பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டு இருந்தன. இவை ரூ.2 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. இதை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதனால் அகல் விளக்குகள் விற்பனை சூடுபிடித்தது. இன்று (வியாழக்கிழமை) அகல் விளக்குகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கிடையே வழக்கம்போல் இந்த ஆண்டும் நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை இரவு 7 மணி அளவில் 1,008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Next Story