நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை


நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 8:39 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, 

நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்றும் காலையில் இருந்தே வெயில் அடித்தது. நெல்லை பகுதியில் மதியம் 2.30 மணி அளவில் வானத்தில் கருமேகங்களாக காட்சி அளித்தது. மாலை 3.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு, பஸ்நிலையம் பகுதியிலும் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், குண்டாறு அணைப்பகுதி, செங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை பரவலாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் குண்டாறு அணைக்கு வரும் 35 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் நேற்று பரவராக மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, சிவகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. நேற்று மழை பெய்யவில்லை.

கருப்பாநதி அணைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் 72.10 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 66.60 அடியாக உள்ளது. மேலும் அணையில் இதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளதால் அணைக்கு வரும் 67 கன அடி தண்ணீரும் அப்படியே மறுகால் மூலம் வெளியேற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லிமீட்டர்) வருமாறு:-

மணிமுத்தாறு-28, கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, ராமநதி-5, தென்காசி-4.30 சிவகிரி-3, பாளையங்கோட்டை 2.40, கடனாநதி-2, அடவிநயினார் அணை-2.

Related Tags :
Next Story