கேரளாவில் பக்தர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கேரளாவில் பக்தர்கள் தாக்கப்படுவதை கண்டித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:45 PM GMT (Updated: 21 Nov 2018 9:00 PM GMT)

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பக்தர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, கரூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

சபரிமலையில் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்டு தீர்ப்பு வழங்கியது. இதனை கண்டித்து அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் கேரளா வில் போராட்டம் நடத்திய போது தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பா.ஜ.க. திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது சபரிமலையின் புனிதத்தை காக்க 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் சபரி மலைக்கு செல்லமாட்டோம் என உறுதிமொழியேற்றனர்.

கேரள அரசு பதவி விலகக்கோரி...

இந்த ஆர்ப்பாட்டத்தில், சபரிமலையில் 10 முதல் 50 வயதான பெண்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான தீர்ப்பினை கோர்ட்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அய்யப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து கேரள அரசு தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் கோர்ட்டு தீர்ப்பினை ஏற்று கொண்டு பெரும்பாலான பெண்கள் சபரிமலைக்கு வருவதில்லை. இதில் இருந்தே அந்த கோவிலின் மாண்பு தெரிகிறது. எனவே சபரிமலையில் தொன்று தொட்டு பின்பற்றி வரும் ஆகமவிதிகளை மாற்றக்கூடாது என சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி கரூர் கோட்ட பொறுப்பாளர் கனகராஜ், பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி மோகன், பாரதீய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்பட கார்த்திகை மாதபிறப்பையொட்டி சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story